நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளரின் செயல்பாடுகள் குறித்து கடும் குற்றச்சாட்டு: உறுப்பினர்கள் வெளிநடப்பு



 


நூருல் ஹுதா உமர்


நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் அவர்களின் செயல்பாடுகள் தொடர்பாக கடும் எதிர்ப்பும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளன. பிரதேச சபை உறுப்பினர்களின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஜனநாயக நடைமுறைகளை மீறுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இன்று நாவிதன்வெளியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ. நளீர், தவிசாளர் தன்னிச்சையான முறையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாவிதன்வெளி பிரதேச சபையினதும் உறுப்பினர்களினதும் அனுமதியின்றி, சம்மாந்துறை பிரதேச சபை எல்லைகளுக்குள் சேவையாற்ற மின்னிணைப்பு ஊழியர்கள் அனுப்பப்படுவது மிகக் கவலைக்கிடமானதாகும் என குறிப்பிட்டார். இவ்வாறு அனுப்பப்படும் ஊழியர்களுக்கு ஏதேனும் விபத்து அல்லது சேதம் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை யார் ஏற்கப் போகின்றனர் என்ற கேள்வியும் எழுப்பினார்.

மேலும், தவிசாளர் சட்டநெறிகளையும் நிர்வாக ஒழுங்குகளையும் மீறி செயல்பட்டு வருவதாகவும், இது பிரதேச சபையின் ஒழுங்குமுறையைக் கேள்விக்குறியாக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபையின் 10வது கூட்டத் தொடரில், தவிசாளரின் இச்செயல்பாடுகளை கண்டித்து, ஐக்கிய மக்கள் முன்னணி சார்பிலான சுயாட்சி குழு உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினரும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக அவர் தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் தமக்கு, தமது பிரதேசத்தில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், அதுவே நல்லாட்சிக்கான அடிப்படை என்றும் அவர் வலியுறுத்தினார். இத்துடன், “மக்களின் குரலாக தொடர்ந்தும் ஒலிப்போம்” என உறுதியளித்த அவர், மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க தொடர்ந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையும் முன்வைத்த அவர் மக்கள் நலனை தவிசாளர் முன்னிறுத்தி செயற்பட முன்வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.