ஒலுவில் துறைமுகத்தின் தாக்கம்: அம்பாறை கரையோரம் கடலில் கரைகிறது!




 “ஒலுவில் துறைமுகத்தின் தாக்கம்: அம்பாறை கரையோரம் கடலில் கரைகிறது!”

தவறான அபிவிருத்தித் திட்டங்களால் பல தலைமுறைகள் பாதிப்பு – மக்கள் வேதனை


நூருல் ஹுதா உமர் 


அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அனர்த்தம் குறித்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் அச்சமும் நிலவி வருகிறது. குறிப்பாக ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட பின்னர் கடலின் இயல்பான நீரோட்ட அமைப்புகள் மாற்றமடைந்ததன் விளைவாக கரையோர நிலப்பரப்புகள் வேகமாக கடலால் விழுங்கப்பட்டு வருவதாக மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்படும் காலகட்டத்திலேயே பல கடலியல் நிபுணர்களும், மீனவ சமூக பிரதிநிதிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்காலத்தில் கடுமையான கரையரிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அரசியல் அதிகாரமும், ஒப்பந்த நிறுவனங்களின் பொருளாதார நோக்கங்களும் அந்த எச்சரிக்கைகளை புறக்கணித்ததாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


தற்போது ஒலுவில், நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை உள்ளிட்ட பல கடலோரப் பகுதிகளில் கடல் வேகமாக உள்வாங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் மருதமுனை, பாண்டிருப்பு, கல்லாறு போன்ற பகுதிகளும் கடலரிப்பின் ஆபத்தில் சிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


மாளிகைக்காடு பகுதியில் அமைந்திருந்த மையவாடி முழுமையாக கடலுக்குள் சென்று அழிந்துள்ளதாகவும், பல இடங்களில் வீடுகள், மரங்கள், மக்கள் பயன்படுத்திய கடற்கரைப் பகுதிகள் ஆகியவை கடலால் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் வலை உலர்த்திய மணற்பரப்புகள் கூட இன்று கடலின் பகுதியாக மாறியுள்ளன.


“ஒரு துறைமுகத்தை அமைப்பது மட்டுமே அபிவிருத்தி அல்ல; அது மனித வாழ்வையும் இயற்கை சமநிலையையும் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


இந்நிலையில், கடந்தகாலத்தில் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய அரசியல் தலைவர்கள், தொழில்நுட்ப ஆய்வுகளை புறக்கணித்த அதிகாரிகள் மற்றும் நிர்மாணப் பொறுப்பை ஏற்ற நிறுவனங்கள் ஆகியோர் இந்த சூழ்நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அம்பாறை மாவட்டத்தில் தற்போது நடைபெறுவது சாதாரண கரையரிப்பு அல்ல; தவறான அபிவிருத்தித் திட்டங்கள் ஒரு சமூகத்தின் வாழ்வுரிமை, பாரம்பரியம் மற்றும் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கான நேரடி எடுத்துக்காட்டாக இது மாறியுள்ளது என பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.