இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழுஉறுப்பினர்கள்



 


 இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இருவர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து (UAE) நேற்று (13) இரவு நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.


பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான 'மோதர நிபுண' என்பவரின் சகோதரர் மற்றும் 'புளூமெண்டல் சங்கா' ஆகிய இருவருமே இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.


இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இந்த சந்தேகநபர்கள் இருவரும், சட்ட அமலாக்கப் பிரிவினரிடமிருந்து தப்பிப்பதற்காக அபுதாபியில் மறைந்து வாழ்ந்து வந்தனர்.


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தங்களது கைபேசிகளில் வைத்திருந்த குற்றத்திற்காக அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் இவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்தே அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.



கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர்கள் இருவரையும் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.


'மோதர சத்துர' இவரிடம் விரிவான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


'புளூமெண்டல் சங்கா': இவரிடம் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.


இவர்களிடம் பெறப்படும் வாக்குமூலங்களின் அடிப்படையில், இலங்கையிலுள்ள இவர்களது ஏனைய சகாக்கள் மற்றும் போதைப்பொருள் வலைப்பின்னல்கள் குறித்தும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.