இரானிடம் சிக்கிய அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கி வாகனம்!



 


அமெரிக்க இராணுவத்தின் மிக நவீன மற்றும் நுண்ணறிவு திறன் கொண்ட ஆளில்லா நீர்மூழ்கி வாகனங்களில் ஒன்று தங்களிடம் சிக்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.


அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான குறித்த நவீன ஆளில்லா நீர்மூழ்கி வாகனத்தை, ஹோர்முஸ் ஜலசந்தியின் நுழைவுப் பகுதியில் கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது. 


சிக்கலான உளவுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் இந்த நீர்மூழ்கி வாகனம் கைப்பற்றப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவல்படையின் கடற்படை தெரிவித்துள்ளது. 


மேலும், அதனை கைப்பற்றிய காட்சிகளையும் ஈரான் வெளியிட்டுள்ளது. இதற்கு விளக்கமளித்த அமெரிக்கா இராணுவம், ஈரான் கைப்பற்றியதாக கூறப்படும் நீர்மூழ்கி கப்பல் ஒரு நாளுக்கு முன்பே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.


மேலும், அதில் இரகசிய தகவல்களை சேகரிக்கும் கருவிகளோ, ரகசிய சோனார் அல்லது ரேடார் சாதனங்களோ இல்லை என்றும் கடலுக்கு அடியில் கண்ணிவெடிகளை கண்டறிதல், கடலடிப் பகுதியை வரைபடமாக்குதல், உளவுத் தகவல் சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இதைப் பயன்படுத்த முடியும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.