கோப் 21 என்றழைக்கப்படும், இந்த உச்சிமாநாடு திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துதற்கான நீண்ட கால ஒப்பந்தமொன்று இம்முறை எட்டுப்படும் என எதிர்பார்க்கப்பகிறது.
இம்முறை சட்டரீதியாக அனைத்து நாடுகளையும் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் எனும் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
2009ஆம் ஆண்டு டென்மார்க் தலைநகர் கொப்ஹேகனில் நடந்த காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டை விட, இம்முறை மாநாடு மிக பிரமாண்டமாக இருக்கின்ற நிலையில், நீண்ட கால நிலையான தீர்வு இந்த மாநாட்டில் எட்டப்படலாம் ஆர்வலர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
எனினும், இந்த உச்சிமாநாட்டில் முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களைவிட, புவி வெப்பமடைதல் உட்பட காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்த கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு நாடுகளில் ஆர்ப்பாட்ட பேரணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென் கொரியா உட்பட பல நாடுகளில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இம்முறை மாநாட்டில் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்த தீர்மானத்திற்கு வர வேண்டும் என ஆர்ப்பாட்டங்ளில் கலந்துக்கொண்டவர்கள் தெரிவித்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பங்கரவாதிகளால் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், நாளை காலநிலை மாற்றத்திற்கான இந்த உச்சி மாநாடு ஆரம்பமாகிறது.
இதனால் அங்கு பாதுகாப்பு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தததைவிட பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பொலிஸார், தலைநகர் பாரிஸ் உட்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். எரிவாயு சிலிண்டர்கள், பட்டாசு போன்றவற்றை விற்பனை செய்வதற்கும், வாகனங்ளில் கொண்டுச் செல்வதற்கும் டிசம்பர் 13ஆம் தேதி வரை அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
