பருத்தித்துறை முனையில் படகு கவிழ்ந்தது; ஒருவர் பலி, இன்னொருவரைக் காணவில்லை






(டெனிசியஸ்)
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு தொடக்கம் நிலவுகின்ற மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக பருத்தித்துறை முனை பகுதியில் கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மற்றுமொருவரைக் காணவில்லை என்றும் அவரை கடற்படையினர் உதவியுடன் தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் வடமராட்சி கடல் தொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் வைத்திப்பிள்ளை அருள்தாஸ் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
நேற்றிரவு கடலில் வீசப்பட்டிருந்த வலைகளைப் பார்த்துவிட்டு அவற்றில் மீன்கள் சிக்கியிருந்தால் அவற்றை எடுத்து வருவதற்காக இன்று காலை கடலுக்குச் சென்ற 3 மீனவர்களின் படகே கடும் காற்று காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கவிழ்ந்த படகில் இருந்து தப்பிய மீனவர் ஒருவாறு நீந்தி கரைக்குத் திரும்பி ஏனையவர்களின் உதவியுடன் சென்று மற்றைய இருவரையும் தேடியுள்ளார்.
அப்போது ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மற்றவரைத் தேடும் பணிகள் நடைபெறுவதாகவும் அருள்தாஸ் கூறினார்.
இந்தச் சம்பவத்தில் செபஸ்டியன்பிள்ளை ஜெனிபர் என்பவரே உயிரிழந்துள்ளதாகவும், ஜோர்ஜ் சந்திரசேகரன் என்பவரே காணாமல்போயிருப்பதாகவும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.