வாகன நெரிசலைக் குறைப்பது முக்கியமானது-ஜனாதிபதி



வாகன நெரிசலைக் குறைப்பது முக்கியமானது: மாநகர அபிவிருத்தி கலந்துரையாடலில் ஜனாதிபதி
புது வருடத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மாநகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் மாநகர அபிவிருத்தித் திட்ட வரைவு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மூன்று கட்டங்களாக இடம்பெறவுள்ள இந்தத் திட்டம் 2030 ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது.

இதன் மூலம் 10 வருடங்களில் 30 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு முதலீடு செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தெரிவித்ததாவது;

மிக அவசரமாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய திட்டங்களில் வாகன நெரிசலைக் குறைப்பது மிகவும் முக்கியமானது. அதுவொரு பாரிய பிரச்சினையாகும். அதேபோன்று குப்பை கூழங்கள், குடிசை வீடுகள், குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும். அதற்கான தீர்வுகள் உள்ளன. மேல் மாகாண அபிவிருத்தி என்று இதற்கு பெயரிடப்பட்டாலும் இந்தத் திட்டம் நாடளாவிய ரீதியில் வியாபிக்கும்.