கோள்களின் அபூர்வ அணிவகுப்பு அடுத்த புதன் கிழமையிலிருந்து




விண்வெளியில் நட்சத்திரங்களையும், கோள்களையும் பார்த்து ரசிப்பவர்களுக்கு அடுத்த மாதம் ஒரு அபூர்வ விருந்து காத்திருக்கிறது -- ஆம், ஐந்து கோள்கள் அதிகாலை வானில் வரிசையாக ஒரே நேரத்தில் , சாதாரணமாக, தொலைநோக்கி இல்லாமல் பார்ப்பவர்களுக்குக் கூடத் தெரியும்.
புதன், வெள்ளி,செவ்வாய், சனி மற்றும் குரு ஆகிய கிரகங்கள் ( கோள்கள்) பத்தாண்டுகளுக்கும் மேலான காலத்தில் இது போல வரிசையாக அணிவகுத்து உங்கள் கண்களுக்குப் புலப்படப் போகின்றன.
இந்தக் காட்சி அடுத்த புதன்கிழமையிலிருந்து பிப்ரவரி 20 வரை தெரியும்.
ஆனால் புதன் கிரகம் அந்தக் காலகட்டத்தின் இறுதியில் சற்று மங்கலாகத் தெரியும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
பொழுது புலர்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன் பார்க்கத் தொடங்குமாறு விண்வெளி ரசிகர்களுக்கு அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இந்தக் காட்சி, இந்த ஐந்து கோள்களும், அவைகளின் சுற்றுவட்டப் பாதையில் சூரியனின் தோற்றப்பாதை என்றறியப்படும் திசையில் அணிவகுப்பதால் சாத்தியமாகிறது.
நடைமுறையில், இது பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகே இந்தக் கோள்கள் ஒரே வரிசையில் அணிவகுப்பதைத்தான் குறிக்கிறது.
இதே போன்றதொரு அணிவகுப்பு வரும் ஆகஸ்டு 13லிருந்து 19வரை நடக்கும்.
அந்த சமயத்தில் இந்த அணிவகுப்பு அந்தி சாயும் நேரத்தில் நடைபெறும். அப்போது பூமியின் தென்பாதியில் வசிக்கும் மக்கள் இதை நன்றாகப் பார்க்க முடியும்.
கடந்த முறை இதே போன்றதொரு அணிவகுப்பு நடந்தது டிசம்பர் 2004லிருந்து ஜனவரி 2005 வரைதான்.