
-ஹுஸைன் -
ஆசிரியர்களின் சுயாதீன செயற்பாடுகளை மழுங்கடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலய ஆசிரியர் இடமாற்றம் இரத்துச் செய்யப்படல் வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் கேட்டுள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பி. உதயரூபன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கல்குடா கல்வி வலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆசிரியர்களின் இடமாற்றம் பாடசாலை மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் சுயாதீன செயற்பாடுகளை மழுங்கடிக்கும் வகையிலும் கல்வி நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையிலும் தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கு முரணாகவும் அமைந்துள்ளது.
பல்வேறான இன்னல்களுக்கு மத்தியில் கடந்த காலங்களில் கஷ்;டப் பிரதேச பாடசாலைகளில் அர்ப்பணிப்புடன் சிறப்பானதும் மகிழ்ச்சிகரமானதுமான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த பல ஆசிரியர்கள் மீண்டும் கஷ்;;டப் பிரதேச பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கை, மற்றும் தாபனவிதிகள், இடமாற்றம் தொடர்பான அதிவிஷே வர்த்தமானி மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள சட்டவாட்சி புறக்கணிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு முறையற்ற இடமாற்றங்கள் வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
வருட ஆரம்பத்தில் வழங்கப்படவேண்டிய இடமாற்றங்கள் தாமதப்படுத்தப்பட்டு, முறையற்ற விதத்தில் வழங்கப்பட்டிருப்பதனால் கல்குடா கல்வி வலய கல்வி நடவடிக்கைகள் சீர்குலைந்துள்ளன.
இவ்வாசிரியர் இடமாற்றங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மௌனம் சாதிக்காமல் உடனடி நடவக்கை எடுக்குமாறு சங்கம் வேண்டிக் கொள்கின்றது.
