கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்வுகளிலும் தாம் பங்கேற்கப் போவதில்லை எனவும், முப்படை முகாம்களுக்குள் நசீர் அஹமட் அனுமதிக்கப்பட கூடாது எனவும் மேற்கொண்ட தீர்மானத்தை நீக்கிக் கொள்ள முப்படையினர் தீர்மானித்துள்ளனர். கடந்த 20-ஆம் தேதி திருகோணமலை மாவட்டம் சம்பூர் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கடற்படை அதிகாரியொருவர் மீது முதலமைச்சர் கடும் வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து, முப்படைகளின் தளங்களுக்குள் நுழைய கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு முப்படைகளினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை புறக்கணிக்கப் போவதாகவும் முப்படையினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தடை நீக்கம் பற்றி முதலமைச்சரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதனை இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர, உறுதிப்படுத்தினார்.
இந்த முடிவு ஜனாதிபதி நாட்டில் இல்லா நேரத்தில் முப்படையினரால் எடுக்கப்பட்டிருந்த நிலையில் அரசியல் பின் புலத்தில் எடுக்கப்பட்ட முடிவு என கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமத் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்து எழுதிய கடிதத்திலும், இதனை சுட்டிக் காட்டியிருந்தார்.
இதனிடையே, ஜப்பானிலிருந்து தற்போது நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விவகாரம் குறித்து கவனம் செலுத்தியுள்ள நிலையில், இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment