பால்சேனைப் பிரதேசத்தில் காட்டு யானகள் கைவரிசை



கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையால் குடிசைகளுக்கும் குடும்பஸ்தருக்கும்  சேதம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்திலுள்ள பால்சேனை கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை (16.5.2016) ஊருக்குள் புகுந்த காட்டு யானை குடிசைகளையும் சேதப்படுத்தி குடும்பஸ்தரையும் தாக்கியுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

இதன் தாக்குதலினால் 2 தற்காலிக கொட்டில்கள் இரண்டு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் பொருட்ளும் சேதமாக்கப்பட்டுள்ளன.

மேலும், 03 கல் வீடுகளுக்கும் பகுதியளவில் சேதமேற்பட்டுள்ளது.

அத்துடன், வீட்டு வளவிலிருந்த தென்னை வாழை மற்றும் சிறு தோட்டப்பயிர்களையும் காட்டு யானை துவம்சம் செய்துள்ளது.

இதேவேளை கடந்த வாரம் பால்சேனை காட்டிற்கு பாலப்பழம் பறிக்கச் சென்ற குடும்பஸ்த்தர் ஒருவர்  யானையின் தாக்குதலுக்கு இலக்காகி  காயத்திற்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இருந்த போதிலும் நேற்று அதிகாலையும் தமது வீட்டிக்கு வந்து வெளியில் நின்ற தம்மை மீண்டும் தாக்குவதற்கு முயற்சித்ததாகவும் பக்கத்து வீட்டுக்காரர் உரக்க கூச்சலிட்டதால் வீட்டுக்குள் புகுந்து கதவினை அடைத்து உயிரிதப்பியுள்ளதாக அவர் தெரிவித்;தார்.

காட்டு யானைகளின் தொல்லை காரணமாக இரவில் நிம்மதியாக தூங்கம் கொள்ள முடியாமல் உள்ளதாகவும் கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும் துன்பப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கடன் பெற்று சிறு விவசாயத்தில் ஈடுபடும் தங்களுக்கு பயிர்கள் விளையும் தறுவாயில் காட்டு யானைகள் இரவில் வந்து துவம்சம் செய்வதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து யானைகளின் தொல்லையில் இருந்து தம்மை பாதுகாக்குமாறு கிராம மக்கள் வேண்டி நிற்கின்றனர்.