தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திற்கு அதிகாரமளிக்கும் வகையில் வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் சட்டம் பிரிவு 34 (1)ல் செய்யப்பட்டிருக்கும் திருத்தத்தின் படி, நீதிமன்ற ஆவணங்களைத் திருத்தும் வழக்கறிஞர்கள், நீதிபதிகளை தரக்குறைவாக பேசும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற அறையில் முற்றுகையிலோ, பதாகையைப் பிடித்து நிற்கும் செயலிலோ ஈடுபடும் வழக்கறிஞர்கள், குடித்துவிட்டு வரும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் மீது நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க முடியும்.
இதற்கு முன்பாக, இம்மாதிரி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துவந்தது.
ஆனால், தற்போது செய்யப்பட்டிருக்கும் திருத்தத்தின்படி, சென்னை உயர்நீதிமன்றமோ, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமோ வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
வழக்கறிஞர்கள் செய்யும் குற்றங்களின் தன்மையைப் பொறுத்து, அவர்கள் நிரந்தரமாகவோ, குறிப்பிட்ட காலத்திற்கோ நீதிமன்றத்தில் பணிசெய்ய தடைவிதிக்கப்படுவார்கள் என இந்தத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ரவீந்திரன் வெளியிட்டிருக்கிறார்

