மனநோயாளி கைது
(காரைதீவு நிருபர்)
சம்மாந்துறை கோரக்கர் கிராம அகோரமாரியம்மன் ஆலய உடைப்பு விவகாரம் தொடர்பாக சம்மாந்துறையைச் சேர்ந்த மனநோயாளி ஒருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறைப் பொலிசார் இவரை சனிக்கிழமையன்று பகல் கைதுசெய்தனர்.
வெள்ளி அதிகாலை ஆலயம் தாக்கப்பட்டமை தெரிந்ததே. அன்றே ஆலய நிர்வாகசபைத் தலைவர் ம.பாலசுப்பிரமணியம் தலைமையிலான நிர்வாகத்தினர் இத்தாக்குதல் தொடர்பில் சம்மாந்துறைப் பொலி ஸில் முறைப்பாட்டை பதிவுசெய்திருந்தனர்.
ஆலய நிர்வாகத்தினரை சனியன்று மாலை அழைத்த சம்மாந்துறைப் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி உபுல் பியலால் சந்தேகநபரைக் காட்டினார்.இவர் 24வயது மதிக்கத்தக்க முஸ்லிம் இளைஞராவார்.
அவர் கைது செய்யப்படும்போது அவரி டம் ஆலயத்திற்கான திருவிழா நோட்டிஸ் ஆலயத்தின் 2006ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட அறிக்கை, ஆலயத்திற்கான மின்சாரகட்டண பட்டியல் போன்றன இருந்துள்ளன. இடுப்பில் சாமிக்குக் கட்டும் பட்டுச்சீலை சொருகியிருக்க காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஆவணங்கள் ஆலயத்திலிருந்ததை நிர்வாகத்தினர் ஊர்ஜிதம் செய்தனர்.
அவரை இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யவிருப்பதாகவும் அவர் ஆலய நிர்வாகத்திடம் தெரிவித்தார். ஆலயத்திற்கேற்பட்ட சேதம் தொடர்பாக நிர்வாகத்தினர் சுட்டிக்காட்டினர். மேலும் மனநோயாளியொருவர் ஆலய விக்கிரகங்களை உடைத்திருக்கலாம். ஆனால் மிகவும் பக்குவமாக மண்மேடை அமைத்து அதில் மிகவும் நேர்த்தியாக இலக்கங்களுடன் கூடிய எழுத்துக்களை எழுதியிருப்பாரா? என்பது தொடர்பில் சந்தேகமிருப்பதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரிலேயே மனநோயாளி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தாக் குதல் தொடர்பில் விரிவான விசாரணை தொடர்கிறது என்றார்.

