தாஜூடீன் வழக்கு: முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு பிணை இல்லை




றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூடினின் மரணம் தொடர்பில் சாட்சிகளை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள, முன்னாள் சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோருக்கு பிணை வழங்க இன்று மீண்டும் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த மனு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அனுர சேனாநாயக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தமது கட்சிக்காரர் சிறுநீரக பிரச்சினையால் அவதியுறுவதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரினார். 

அதற்கு எதிர்ப்பு வௌியிட்ட அரச தரப்பு வழக்கறிஞர் சந்தேகநபரால் தாஜூடின் வழக்கு குறித்த விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனக் குறிப்பிட்டார். 

குறிப்பாக தனக்கு சாதகமாக சாட்சியளிக்குமாறு, தனது சாரதிக்கு சந்தேகநபர் அழுத்தம் கொடுத்ததாகவும் அரச தரப்பு வழக்கறிஞர் சுட்டக்காட்டினார். 

விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் சந்தேகநபரை பிணையில் செல்ல அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டார். 

இதற்கமைய அனுர சேனாநாயக்க மற்றும் சுமித் பெரேரா ஆகியோரை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.