அரசாங்கத்தை தோற்கடிக்க நினைத்தவர்களுக்கு கிடைத்தது தோல்வியே



(க.கிஷாந்தன்)

இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கு கூட்டு எதிர்கட்சிகள் பல சதித்திட்டங்களை செய்து வருகின்றார்கள் அதில் ஒரு நாடகமே அண்மையில் பாராளுமன்றத்தில் அரங்கேறிய நம்பிக்கை இல்லா பிரேரணை.

இது நிதி அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்டது அல்ல. இந்த அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டது. இதனை தோற்கடித்தது போல எத்தனை நம்பிக்கை இல்லா பிரேரணை வந்தாலும் தோற்கடிக்க நாங்கள் ஒற்றுமையாக செயற்பட தயாராக இருக்கின்றோம் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா இராகலை தமிழ் மகாவித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரம் க.பொ.த சாதாரண தரம் ஆகியவற்றில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும் புதிய கட்டிடம் ஒன்று திறந்து வைக்கும் நிகழ்வும் (13.06.2016) அன்று காலை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டதுடன் இவருடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் உட்பட கல்வித்திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.நிகழ்வுகள் அனைத்தும் பாடசாலையின் அதிபர் எஸ்.சற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து அங்கு பேசிய கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்

இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கு மலையக மக்கள் தயாராக இல்லை அதற்கு காரணம் இந்த அரசாங்கத்தின் குறுகிய காலப்பகுதியில் தமிழ் பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளின் அபிவிருத்திகள் நடைபெற்று வருகின்றது.

இந்த அபிவிருத்தியின் மூலம் எமது கல்வி முன்னேற்றமடைவதறகான சந்தர்ப்பம் இருக்கின்றது.எனவே அதனை நாம் தட்டிக்களிக்க முடியாது.நாம் ஏற்கனவே கல்வியில் பின்தங்கியவர்களாக இருந்து தற்பொழுது படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகின்றோம்.

குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எங்களுடைய கல்வி தொடர்பாக அதிக அக்கறைகாட்டிவருகின்றார்.என்னை எங்கு கண்டாலும் தமிழ் மொழி மூல பாடசாலைகளின் அபிவிருத்தி தொடாபாகவே அதிகமாக கேட்கின்றார்.அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் தேசிய நிகழ்வு கல்வி அமைச்சர் தலைமையில் கலுத்துறையிலும் என்து தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் ஆரம்பித்து வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் கல்வியில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்விக்காக பெருந் தொகையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்களின் ஆலோசனைக்கமைய சாதாரணதரத்தில் சித்தி எய்தா விட்டாலும் உயர்தரத்தில் கல்வி கற்க முடியும். பாடசாலை கல்வி 13 வருடங்கள் கட்டாய கல்வியாக மாற்றப்பட்டுள்ளது. பாடசாலைகளில் மாணவர்கள் விரும்பும் தொழில் பயிற்சி கல்விகளையும் கற்க முடியும்.

பாடசாலையிலிருந்து விலகும் ஒரு மாணவன் தொழில் இன்மை பிரச்சினைக்கோ தொழில்கள் தெரியாது என்ற பிரச்சினைக்கோ உள்ளாக மாட்டார்கள். இது நாட்டின் தொழில் இன்மை பிரச்சினைக்கு எதிர்காலத்தில் தீர்வாக அமையும். தற்போது மலையகக் கல்வியில் பாரிய புரட்சி ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் நுவரெலியா வலப்பனை கல்வி வலயத்தில் சிங்கள பிரிவை விட தமிழ் பிரிவு முன்னிலையில் இருப்பது பாராட்டத்தக்க ஒன்றாகும்.

மலையக கல்வி வளர்ச்சிக்கு தற்போது 3021 ஆசிரியர் உதவியாளர்கள் நியமனம், 25 விஞ்ஞான, கணித, விளையாட்டு நுண்கலை பாடசாலைகள் அபிவிருத்தி, இந்திய உதவியுடன் 1100 மில்லியன் ரூபா செலவில் 50 பாடசாலைகள் அபிவிருத்தி, உலக வங்கி, யுனிசெப,; ஜிரி,சட் நிறுவனங்களின் ஒத்துழைப்பு அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டம் ஊடாக பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. தற்போது குறைபாடாக இருக்கும் 23000 ஆசிரியர்கள் எதிர்காலத்தில் நியமிக்கப்பட உள்ளனர் அதிலும் மலையகத்தை சார்ந்தவர்கள் உள்வாங்கப்பட உள்ளனர். என்று கூறினார்.