அமெரிக்காவின் ஓர்லேண்டோ நகரில் ஐம்பதுக்கும் அதிகமானோரைச் சுட்டுக் கொன்ற ஒமர் சித்திக் மத்தீன் நியூயார்க்கில் பிறந்தவர். 29 வயதான அவரது தாய் தந்தையர் ஆப்கனைச் சேர்ந்தவர்கள்.
2009-ஆம் ஆண்டில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட மத்தீன், 2011-ஆம் ஆண்டில் அவரிடம் இருந்து பிரிந்துவிட்டார். அதிபர் ஒபாமாவின் கருத்துப்படி, மத்தீனின் மனம் வெறுப்பால் நிறைந்திருந்தது.
2013-ஆம் ஆண்டிலே மத்தீனின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் கொண்ட அமெரிக்காவின் எஃப்பிஐ அதிகாரிகள், இரண்டு முறை அவரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். சில மாதங்கள் கண்காணிப்பதற்கும் உத்தரவிட்டனர். நம்பகமான தகவல்கள் ஏதும் கிடைக்காததால், அவரை அப்பாவி என எஃப்ஐ முடிவு செய்துவிட்டது.
சிரியாவில் இயங்கி வரும் அல்- நுஸ்ரா அமைப்பின் வீடியோவில் தோன்றிய அபுசல்லாவுடன் மத்தீனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று 2014-ஆம் ஆண்டில் எஃபிஐ அமைப்புக்கு மீண்டும் சந்தேகம் ஏற்பட்டது. அப்போதும் மத்தீனுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. வழக்கு மூடப்பட்டது.
இது மத்தீனுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. தாக்குதலை நடத்துவதற்கு நாள்பார்த்து வந்தார். அமெரிக்காவில் துப்பாக்கிகள் தாராளமாகக் கிடைப்பதும் அவருக்கு வாய்ப்பாக இருந்தது.
சில நாள்களுக்கு முன், இரண்டு துப்பாக்கிகளை சட்டப்பூர்வமாகவே வாங்கியிருக்கிறார் மத்தீன். அமெரிக்கச் சட்டப்படி துப்பாக்கிகளை இயக்குவதற்கான பயிற்சி மட்டும் இருந்தால், ஏதாவது ஒரு கடைக்குச் சென்று துப்பாக்கியை வாங்கிவிட முடியும்.
ஜி4S என்ற செக்யூரிட்டி நிறுவனத்தின் வேலை பார்த்த அனுபவம் மத்தீனுக்குப் பயன்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில், ஓர்லேண்டாவின் பல்ஸ் இரவு விடுதிக்குள் புகுந்த அவர் 50-க்கும் அதிகமானோரைச் சுட்டுக் கொன்றபின், காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்தார்.
ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர் என்ற தகவல்களை பரவி வந்தாலும், இந்தச் சம்பவத்துக்கும் மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மத்தீனின் தந்தை கூறுகிறார்.


Post a Comment
Post a Comment