மேன் முறையீடு செய்கின்றார் மரியா ஷரபோவா



நேற்று முந்தைய தினம் ஆட்டத் தடை விதிக்கப்பட்ட ஷரபோவா தான் அத் தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்வதாக அறிவித்துள்ளார்.
உலகின் முன்னாள் முதல்நிலை ஷரபோவா, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியமைக்காக, டென்னிஸ் போட்டிகளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாண்டு இடம்பெற்ற அவுஸ்திரேலியப் பகிரங்க டென்னிஸ் தொடரின்போதும் (ஜனவரி 26) தொடருக்குப் பின்னர் மொஸ்கோவில் வைத்தும் (பெப்ரவரி 2) சேகரிக்கப்பட்ட மாதிரிகளில், தடைசெய்யப்பட்ட மருந்தான மெல்டோனியத்தை அவர் உட்கொண்டிருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மார்ச் மாதத்திலிருந்து அவர் இடைக்காலத் தடைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, ஊக்கமருந்துக்கெதிரான விசாரணைகள், இலண்டனில் கடந்த மாதம் இடம்பெற்றன.
இந்தத் தண்டனையை, மிகவும் பாரதூரமான தண்டனை என தெரிவித்துள்ள 29 வயதான மரியா ஷரபோவா, குறித்த மருந்து இதய நோய்க்கு பயன்படுத்தப்படுவது எனவும் 2006 ஆம் ஆண்டு முதல் குறித்த மருந்தினை தனது உடல் நிலையை கருத்திற் கொண்டு பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
5 தடவைகள் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள மரிய ஷரபோவா குறித்த தீர்ப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்