-எஸ்.கார்த்திகேசு-
அம்பாறை, திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின் பௌதீகவளங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கந்தசாமி முருகானந்தன் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் 1.8 மில்லியன் பெறுமதியான வேலைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வருடம் கட்டமங்களின் திருத்த வேலைகளுக்காக 13 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வைத்திய உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்காக 15 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக அபிவிருத்தி வேலைகளுக்காக 860 இலட்சம் ரூபாய் நிதியும் ஓதுக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் ஒருதொகுதி உபகரணங்கள் இவ்வருடத்தில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வைத்தியசாலையில் உள்ள சிறுவர் விடுதி மற்றும் பற்சிகிச்சை பிரிவுகளை திருத்தம் செய்வதற்காக 7 மில்லியனுக்கான வேலைகள் அடுத்த வாராம் ஒப்பந்தக்காரர்களிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், இவ்வருட டிசம்பர் மாதத்திற்கு 13 மில்லியன் நிதிக்கான அபிவிருத்தி வேலைகள் பூர்த்தி செய்யப்படவுள்ளது. அத்துடன் மாவட்ட வைத்தியசாலையாக இருக்கின்ற திருக்கோவில் வைத்தியசாலையானது ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
இதற்கான வேலைகளும் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கந்தசாமி முருகாணந்தன் உறுதியளித்தள்ளார். திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையானது சுமார் 1902ஆம் ஆண்டு முதல் இயங்கி வருவதுடன் இவ்வைத்தியசாலையினை நம்பி கோமாரி தொடக்கம் தம்பட்டை வரையான 35 கிராமங்களை உள்ளடக்கிய வகையில் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் பயன் பெறும் வகையில் இவ்வைத்தியசாலை இருந்துவருகிறது

