சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா (Sirimavo Ratwatte Dias Bandaranaike) (ஏப்ரல் 17, 1916 - அக்டோபர் 10, 2000) இலங்கையின் ஓர் அரசியல்வாதியாவார். இவர் இலங்கையின் பிரதம மந்திரியாக மூன்று முறை, 1960-1965, 1970-1977 மற்றும் 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் பதவியில் இருந்தவர். இவரே உலகிலேயே முதலாவது பெண் பிரதமருமாவார். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தவர். இவரது கணவர் மறைந்த முன்னாள் இலங்கை பிரதமர் சொலமன் பண்டாரநாயக்கா. மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கா இலங்கையின் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாக இருந்தவர். இவரது ஏனைய மக்கள் அநுரா பண்டாரநாயக்கா, சுனேத்திரா பண்டாரநாயக்கா ஆகியோர்.
தனது கணவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா கொல்லப்பட்டபின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஜூலை 21, 1960 இல் முதன் முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1965 இல் நடந்த பொதுத்தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 1970 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கட்சியை வழி நடாத்தினார். 1970 பொதுத்தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து பெரும் வெற்றி பெற்று இரண்டாம் முறை மீண்டும் பிரதமரானார். 1977 இல் நடந்த தேர்தலில் கட்சி படு தோல்வி அடைந்தது. 1980 இல் அன்றைய ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சியினால் ஊழல் குற்றச்சாட்டுகளில் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு ஏழு வருடங்களுக்கு அரச பதவிகளை ஏற்கத் தடை செய்யப்பட்டார்.2000 .10.10 இல் ஒரு தேர்தல் தினத்தில் இறந்தார்.
| இலங்கையின் பிரதமர் | |
|---|---|
| பதவியில் நவம்பர் 12, 1994 – நவம்பர் 19, 2000 | |
| முன்னவர் | சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா |
| பின்வந்தவர் | டட்லி சேனநாயக்கா |
| தனிநபர் தகவல் | |
| பிறப்பு | ஏப்ரல் 17, 1917 இலங்கை |
| இறப்பு | அக்டோபர் 10, 2000 கொழும்பு, இலங்கை |
| அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி |
| வாழ்க்கை துணைவர்(கள்) | சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா |

