மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கிணற்றில் இன்று(திங்கட்கிழமை) அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ராஜாவின் உத்தரவிற்கு அமைய காலை 11.30 இற்கு அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
காணாமற் போனவர்களின் உறவினர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அகழ்வுப் பணிக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ராஜாவின் முன்னிலையில் 16 திணைக்களங்களின் உத்தியோகஸ்தர்களுடைய பங்குபற்றுதலுடன் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதன் போது சிறு எலும்புத்துண்டுகள் இரண்டு அகழ்வின் போது மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அகழ்வு பணிகளுக்கான நிதியை அரசாங்கம் வழங்கவில்லை எனவும் தனியாரின் ஒத்துழைப்புடனேயே தற்போது அந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மன்னார் மாவட்ட விசேட சட்ட வைத்திய நிபுணர் ஆர்.ஏ.எஸ். ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டால் அரசாங்கம் அகழ்வுக் பணிகளை பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியை அடுத்து அதனை அண்மித்த பகுதியிலுள்ள கிணறு ஒன்றும் காணாமல் போனோரின் உறவினர்களால் அடையாளங் காட்டப்பட்டிருந்தது.
அதனை அகழ்வதற்கான உத்தரவு ஏற்கவே பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், சட்ட வைத்திய அதிகாரிகள் வருகை தராமை, சீரற்ற வானிலை உள்ளிட்ட காரணங்களால் அகழ்வு பணிகள் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

