முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்காக கொழும்பிலிருந்து புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டதனைத் தொடர்ந்து விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட குழுவினர் வேறொரு விமானத்தின் மூலம் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை பாதுகாப்பாக சற்று முன்னர் சென்றடைந்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்தில் இன்று பல்வேறுப்பட்ட தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க, யாழ். மாவட்ட செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கைத்தொழில், சுற்றுலா மற்றும் ஏற்றுமதி சேவைகள் மையத்திற்கான அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் ஆரம்பிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மழைநீர் சேகரிப்பதற்கான கருத்திட்டத்தை வடக்கு மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் மழைநீரை சேகரிக்கும் நீர்த் தாங்கிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதியும், நல்லிணக்க ஒருங்கிணைப்பின் தலைவியுமான சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
