'தலைமறைவான நரியை' கண்டுபிடிக்க பொலிஸார் தொடர்ந்து தேடுதல் வேட்டை



-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயம் அங்கிருந்து தப்பித் தலைமறைவாகிய மட்டக்களப்பு திராய்மடுப் பகுதி மீன் வர்த்தகரைக் கண்டுபிடிக்கும் தேடுதல் வேட்டையில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.
திராய்மடு எனும் பிரதேசத்தில் அடாவடித்தனங்கள் புரிந்து வருவதாகத் தெரிவிக்கப்படும் பிரபல மீன் வியாபாரி ஒருவர் கடந்த வியாழக்கிழமை (ஓகஸ்ட் 11, 2016) கிராமத்திலுள்ள இளைஞர்கள் சிலரைத் தாக்கியுள்ளார்.
இளைஞர்களைத் தாக்கிய அந்த மீன் வியாபாரி உட்பட அவரது ஆதரவாளர் ஒருவரும் மற்றும் எதிர்ப்பு அணியிலுள்ள இளைஞர் குழுவைச் சேர்ந்த ஆறு பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்படடிருந்தனர்.
எனினும், கைது செய்யப்பட்ட வர்த்தகர் காயமேற்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயம் காணாமல் போயுள்ளார்.
இதுபற்றி அறிந்து கொண்ட பிரதேச மக்கள் பொலிஸார்தான் அவரை வேண்டுமென்றே தப்பிச் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர் எனக் கூறி இரவோடிரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தப்பிச் செல்லவிடப்பட்ட வர்த்தகர் உடனடியாகக் கiது செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் ஆக்ரோஷமாகவும் உறுதியாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால்  உடனடியான பொலிஸ் அணியொன்று தலைமறைவாகிய வர்த்தகரைத் தேடும் பணியில் திராய்மடு கிராத்திற்கு அனுப்பப்பட்டபோதும் இன்னமும் (சனிக்கிழமை வரை) கண்டு பிடிக்க முடியவில்லை.
இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் பொலிஸார் மீது கடுப்பில் உள்ளார்கள்.