கலப்படம் செய்யப்பட்ட கொத்தமல்லி



கலப்படம் செய்யப்பட்ட கொத்தமல்லி   575 கிலோகிராம் கைப்பற்றப்பட்டது
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததன் பேரில் கலப்படம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 575 கிலோகிராம் கொத்தமல்லியைத் தாம் சனிக்கிழமை (ஓகஸ்ட் 13, 2016) கைப்பற்றியதாக ஏறாவூர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
23 பைகளில் நிரப்பப்பட்ட தலா 25 கிலோகிராம் கொண்ட இந்த கலப்படம் செய்யப்பட்ட கொத்தமல்லி லொறியொன்றில் வேறு சரக்குகளுக்கு மத்தியில் மறைத்து வைத்து கொழும்பிலிருந்து ஏறாவூருக்கு ஏற்றிவரப்பட்டபோது வழிமறித்துக் கைப்பற்றப்பட்டு தற்போது ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொத்தமல்லி எங்கு கொள்வனவு செய்யப்பட்டது என்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட பற்றுச் சீட்டை கொத்தமல்லியை ஏற்றி வந்த வர்த்தகர்கள் தம்வசம் வைத்திருக்கவில்லை என்று ஏறாவூர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட கொத்தமல்லியின் மாதிரி பெற்றுக் கொள்ளப்பட்டு அவை கொழும்பிலுள்ள வைத்திய ஆய்வு நிறுவகத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பிலுள்ள வைத்திய ஆய்வு நிறுவகத்தில் வைத்து இவை கலப்படம் செய்யப்பட்டதா, மனித நுகர்வுக்கு உகந்ததா, பழுதுபட்டதால் பழபழப்பாக்கப்பட்டதா என்று பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் பின்னர் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் சிரேஷ்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ். புலேந்திரகுமார் தெரிவித்தார்.