(க.கிஷாந்தன்)
புஸல்லாவை பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த இளைஞன் ஒருவர் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
விசாரணைகளை ஆரம்பித்த நீதிபதி திருமதி சாந்தனி மீகொட, உயிரிழந்த ரவிசந்திரனின் தந்தையிடமும், அண்ணனிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டார். அதன்பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதன்போது, தூக்குப்போடுவதற்கு குறித்த இளைஞன் பயன்படுத்தியதாகக் கூறப்படும் டீசெட்டை பயன்படுத்தி, சுருக்குஒன்றை போட்டுக்காட்டுமாறு பொலிஸார் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிக்கு பணிப்புரை விடுத்தார்.
இதன்படி சட்டத்தரணியும் கடும்சிரமத்துக்கு மத்தியில் சுருக்கொன்றை போட்டார். ஆனால், ஒருவர் தலையிடும் அளவுக்கு அதில் இடமிருக்கவில்லை.
அத்துடன், சுருக்குப்போட்டு உயிரிழந்திருந்தால், டீசேட் கிழிந்திருக்கும் அல்லது இழுபட்டிருக்கும். அவ்வாறு எதுவும் இந்த டீசெட்டில் நடக்கவில்லை.
எனவே, இந்த மரணத்தில் மர்மம் இருப்பதை உணர்ந்த நீதவான், வழக்கு விசாரைணைய அடுத்த மாதம் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அதேவேளை, சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிடுவதற்காக எதிர்வரும் 30 ஆம் திகதி பொலிஸ் நிலையத்துக்கு செல்லவுள்ளார்.

