- எஸ்.கிருபாகரன்-
சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ராம்குமார் மரணம் பலவித சர்ச்சைகளுக்கு வழிவகுத்திருக்கிறது. காவல்துறை எழுதிய கதையில் கனகச்சிதமாக க்ளைமேக்ஸை அமைத்து வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
புழல் சிறையில் உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார், நேற்று மாலை 4. 34 மணியளவில் அங்குள்ள சமையலறையின் மின்கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை வட்டாரம் ராயப்பேட்டை மருத்துவமனை நோயாளிக் குறிப்பில் கச்சிதமாக தெரிவித்திருக்கிறது. இதனிடையே ராம்குமார் மர்ம மரணம் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் தங்களுக்கு எழும் இயல்பான கேள்விகளை காவல்துறையை நோக்கி வீசிவருகின்றனர்.
ராம்குமார் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்பதற்கு ஆணித்தரமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள் வழக்கறிஞர்கள் மனோகரன் மற்றும் கி.நடராஜன் இருவரும். இதில் கி.நடராஜன் பல்வேறு மனித உரிமைப்போராட்டங்களில் கலந்துகொண்டவர். விசாரணைக்கைதியாக 6 முறை சிறையில் கழித்தவர்.
" ராம்குமாரை அவரது வழக்கறிஞர் ராமராஸ் பார்க்கச் சென்ற சில சமயங்களில் நானும் சென்று அவரை சந்தித்திருக்கிறேன். அப்போது அவருடன் உரையாடியும் இருக்கிறேன். வழக்கின் ஆரம்பத்தில் அவரிடம் ஒரு பதற்றமும் பரபரப்பும் தென்பட்டது. தான் நிரபராதி என வலியுறுத்தியிருக்கிறார். கொஞ்சநாளில் அவர் அதிலிருந்து மீண்டுவிட்டார். நான் அவரை சந்தித்த சமயங்களில் அவரிடம் தான் சிறையிலிருந்து வெளியே வருவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அவரது பேச்சிலோ நடத்தையிலோ எந்த குழப்பமும் தென்படவில்லை. வெகு இயல்பாக இந்த வழக்கு குறித்து அவர் பேசுவார். அவரிடம் துளியும் பயமோ குழப்பமான மனநிலையோ தென்பட்டதில்லை. தற்கொலை செய்துகொள்வார் என்று சொல்வதற்கான அறிகுறிகள் துளியும் தென்படவில்லை. உண்மையில் வழக்கில் இருந்து விடுதலையானபின் தனது எதிர்காலம் குறித்து திட்டமிட்டு வைத்திருந்தார். அப்படிப்பட்டவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை ஏற்கமுடியாது.
பொதுவாக சிறையில் உள்ள கட்சிக்காரரை நாங்கள் பார்க்கச் செல்லும்போது அவர்களிடம் உரையாடும்போதே அவர்களின் மனநிலை தெளிவாக புரியும். பேச்சிலோ மனநிலையிலே ஒருவித குழப்பம் தெரிந்தால் அங்குள்ள கண்காணிப்பாளரிடம் அவரை கண்காணிக்கச் சொல்லி அறிவுறுத்துவோம். ஆனால் ராம்குமாருக்கு தான் விடுதலையாவோம் என்ற நம்பிக்கை ஆரம்பித்திலேயே வந்துவிட்டது.
அவர் தற்கொலை முடிவு எடுக்கும்படியான எந்த அவசியமும் அவருக்கு வழக்கு தொடர்பாக ஏற்படவில்லை. அவரது பேச்சிலும் சோர்வோ விரக்தியோ துளியும் இல்லை. பொதுவாக கொலைவழக்கின் குற்றவாளிக்கு 90 நாட்களுக்குள் குற்றச்சாட்டு வனையவில்லை என்றால் சட்டப்படி நீதிபதி அவருக்கு பிணை வழங்குவார். ராம்குமார் வழக்கில் இன்னமும் அதை செய்யவில்லை என்பதால் சில நாட்களில் தான் வெளியே வருவோம் என்பதில் நிரம்ப மகிழ்ச்சியிருந்தது. சிறையிலும் தனக்கு தொந்தரவில்லை என்று தெரிவித்திருந்தார். அதே நம்பிக்கையோடே எங்களிடம் அவர் பேசினார்.
பொதுவாக சிறையில் உள்ள கட்சிக்காரரை நாங்கள் பார்க்கச் செல்லும்போது அவர்களிடம் உரையாடும்போதே அவர்களின் மனநிலை தெளிவாக புரியும். பேச்சிலோ மனநிலையிலே ஒருவித குழப்பம் தெரிந்தால் அங்குள்ள கண்காணிப்பாளரிடம் அவரை கண்காணிக்கச் சொல்லி அறிவுறுத்துவோம். ஆனால் ராம்குமாருக்கு தான் விடுதலையாவோம் என்ற நம்பிக்கை ஆரம்பித்திலேயே வந்துவிட்டது.
அவர் தற்கொலை முடிவு எடுக்கும்படியான எந்த அவசியமும் அவருக்கு வழக்கு தொடர்பாக ஏற்படவில்லை. அவரது பேச்சிலும் சோர்வோ விரக்தியோ துளியும் இல்லை. பொதுவாக கொலைவழக்கின் குற்றவாளிக்கு 90 நாட்களுக்குள் குற்றச்சாட்டு வனையவில்லை என்றால் சட்டப்படி நீதிபதி அவருக்கு பிணை வழங்குவார். ராம்குமார் வழக்கில் இன்னமும் அதை செய்யவில்லை என்பதால் சில நாட்களில் தான் வெளியே வருவோம் என்பதில் நிரம்ப மகிழ்ச்சியிருந்தது. சிறையிலும் தனக்கு தொந்தரவில்லை என்று தெரிவித்திருந்தார். அதே நம்பிக்கையோடே எங்களிடம் அவர் பேசினார்.
பொதுவாக சிறைச்சாலையில் தண்டனைக்கைதிகள், விசாரணை கைதிகள் என தனித்தனியே பராமரிக்கப்படுவார்கள். ராம்குமார் விசாரணைக்கைதி என்பதால் சென்சிடிவ் வழக்கு என்பதாலும் உயர் பாதுகாப்பு கொட்டடி எனப்படும் அறை எண் 2ல் டிஸ்பென்சரி பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் இரண்டு கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
ராம்குமார் இருந்த அறையைப்பொறுத்தவரை அவர் எளிதாக எல்லா இடங்களுக்கும் போய்விடமுடியாது. அவர் 24 மணிநேரமும் அதிகாரிகள், வார்டன்கள் கான்ஸ்டபிள்கள் சுற்றிவந்துகொண்டே இருப்பர். யாரும் ஏணிப்போட்டாலும் உங்களைால் சுவற்றினை எட்டிப்பிடிக்க முடியாது. கைதியின் பாதுகாப்பிற்காக சிறையில் அவரை சந்திப்பவர்களை கூட உள்ளாடை முதற்கொண்டு பரிசோதித்து அரைஞான் கயிற்றைக்கூட அறுத்துக்கொண்டுதான் அனுமதிப்பர்.
அப்படிப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் கொண்ட சிறையில் ஒருவன் 10 அடிக்கும் மேல் உயரம் கொண்ட சுவற்றில் உள்ள மின் ஒயரை எட்டிப்பிடித்து கடித்து தற்கொலை செய்துகொண்டான் என்பதை குழந்தை கூட நம்பாது. அதற்கான கட்டமைப்பே சிறையில் கிடையாது. கைதிகள் தப்பிச்செல்லும் அபாயம் இருப்பதால் சிறையின் கட்டமைப்பை அப்படி அமைப்பர். 2 கைதிகள், சில காவல் அதிகாரிகள், கான்ஸ்டபிள்கள் கண்காணிப்பில் உள்ள ராம்குமாரை குறிப்பிட்ட துாரத்திற்கு மேல் நடமாட அனுமதிக்கமாட்டார்கள்.
சாதாரணமாக கட்சிக்காரர்களை வழக்கறிஞர்கள் அல்லது உறவினர்கள் சந்திக்கச் சென்றாலே மொத்தமாக ரிமாண்ட் கைதிகளை ஒன்றாக அமரச்செய்து பேச வைப்பர். ஆனால் ராம்குமார் உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டவர் அதிகாரிகள் க்யு பிராஞ்ச் அதிகாரிகள் விஜிலென்ஸ் அதிகாரிகள் இருவர் என இத்தனை பேரின் மத்தியில்தான் பேசமுடியும். அதுவும் சிறை கண்காணிப்பாளர் அறையில் வைத்தே பேச அனுமதிப்பர்.
இப்படி ஒரு நடைமுறை உள்ள சிறையில் உயிரை இழப்பதற்கான கருவிகள் கொண்ட சமையலறையில ஒரு கைதி குறிப்பாக ஏற்கனவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சொல்லப்பட்ட, உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்ட ஒரு கைதி சர்வசாதாரணமாக நுழைந்து மேலே ஏறி ஒயரை பிடித்து கடித்தான் என்பது முற்றிலும் நம்பும்படியாக இல்லை.
உண்மையில் ராம்குமார் வழக்கில் பல உண்மைகள் மறைந்துள்ளன. இந்த வழக்கில் வேறு பலர் தொடர்புள்ளதாக கூறி தமிழச்சி,திலீபன் போன்ற சிலர் அதற்கான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்துவருகின்றனர். ஒரு கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும். இல்லையென்றால் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 167 (2) ன் கீழ் பெயில் மாஜிஸ்திரேட் பெயில் தரவேண்டும்.
வழக்கில் உள்ள பல குழப்பங்களால் காவல்துறையால் இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை. அதன்படி இன்னும் சில நாட்களில் ராம்குமாருக்கு பெயில் கிடைக்கும். மேலும் ராம்குமாருக்கு தண்டனை பெற்றுத்தரும் அளவு வழக்கில் அவர்களால் முன்னேற முடியவில்லை. வழக்கில் பல குழப்பங்கள் என்பதால் அவனுக்கு தண்டனை பெற்றுத்தர முடியாது என்ற முடிவுடன் இப்படி தற்கொலை நாடகமாடி வழக்கை முடித்துவிட்டார்கள்” என்றார் மனோகரன்.
தொடர்ந்து பேசிய கி.நடராஜ் " 6 முறை விசாரணைக்கைதியாக இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். மிகவும் பாதுகாப்புமிக்க உயர் பாதுகாப்பு தொகுதியிலிருந்து ஒருவன் சமயலறைக்கு சென்று மின் ஒயரைப் பிடித்து கடித்தான் என்பது நகைப்புக்குரியது. அத்தனை எளிதாக யாரும் சமயலறைக்கு செல்லமுடியாது. அத்தனை பாதுகாப்பு மிக்கது ராம்குமார் அடைக்கப்பட்டிருந்த அறை“ என்றார் கி.நடராஜ்.
இதனிடையே வழக்கறிஞர் சங்கர சுப்பு, 'ராம்குமார் போஸ்ட்மார்ட்டம் நடக்கும்போது தங்கள் தரப்பில் 2 மருத்துவர்கள் உடனிருக்க அனுமதி வேண்டி மனு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுப்பதாக கூறி அரசு வழக்கறிஞர்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை போஸ்ட்மார்ட்டம் செய்யக்கூடாது என வாய்மொழி உத்தரவிட்டார். 2.15 மணிக்கு இதன் மீது நடைபெற்ற விசாரணையில் நீதிமன்றம் சார்பில் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளார்.

