இலங்கையின் வடமேற்கு நகரமாகிய மன்னாரில், பள்ளிமுனை என்ற இடத்தில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருமளவு ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருப்பதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
ரகசிய தகவல் ஒன்று கிடைத்ததை அடுத்து, கடற்படையினரால் இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக, இந்திய பிரஜைகள் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2 கிலோ 24 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் வவுனியாவில் உள்ள போதைப்பொருள் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு கிலோவுக்கும் மேற்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் வட பகுதியில் கைப்பற்றப்பட்டிருப்பது இது முதல் தடவையாகும்.
இந்த சம்பவம் தொடர்பாக மன்னார் போதைப்பொருள் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

