-சுப்பிரமணியம் பாஸ்கரன்-
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள கண்டாவளை மற்றும் புளியம்பொக்கனை ஆகிய கிராமங்களுக்கு இடைப்பட்ட காட்டு பகுதியில், பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டது, கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்னவின் கட்டளைக்கமைய, கிளிநொச்சி மாவட்ட மது ஒழிப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயவர்த்னவின் தலைமையலான குழுவினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, குறித்த காட்டு பகுதியிலிருந்து சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 2 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 10 உள்ளுர் துவக்குகள் (கட்டுதுவக்குகள்) மற்றும் ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் 68, ஈய துகள்கள் 60 என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நிறைவுற்றதும், சந்தேக நபர்களையும், மீட்கப்பட்ட பொருட்களையும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

