ஐ.எஸ் அமைப்போடு இலங்கை முஸ்லிம்கள் யாருக்கும் தொடர்பில்லை



உலக பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் ஐ.எஸ் .ஐ.எஸ் அமைப்புடன் இலங்கையிலுள்ள எந்தவொரு முஸ்லிம் அமைப்போ அல்லது தனி நபரோ தொடர்புகள் வைத்திருக்கவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதின் கூறுகின்றார்.

நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ, இலங்கையின் 4 குடும்பங்களை சேர்ந்த 32 பேர் ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
நீதி அமைச்சரின் இந்த உரை குறித்து முஸ்லிம் அரசியல் வாதிகளும் சிவில் அமைப்புகளும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
இன்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ரிஷாத் பதியுதின் ''32 பேர் இணைந்ததாக கூறப்படுவது, தான் அறிந்த வரையில் இரு வருடங்களுக்கு முன்னதாக நடந்ததாக இருக்கலாம்." என்றார் .
''இலங்கையிலுள்ள எந்தவொரு முஸ்லிம் அமைப்போ அல்லது தனி நபரோ இந்த அமைப்போடு தொடர்பில் இல்லை. அவர்கள் அந்த அமைப்புக்கு உடந்தையாகவோ அல்லது ஆதரவாகவோ இருக்க மாட்டார்கள்'' என்றும் வலியுறுத்தி கூறிய அவர், சிலர் அப்பாவி முஸ்லிம்கள் மீது வீண் பழி சுமத்துவதாகவும் குறிப்பிட்டார்.