பாதுகாப்புச் செயலாளர் உடன் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என நீதியான சமூகத்துக்கான தேசிய அமைப்பின் தேசிய ஏற்பாட்டாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் பாதுகாப்புச் செயலாளரை நீக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அறிவித்தல் விடுத்தார்.
தற்போதைய பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவின் மூளையில், அவருக்குத் தேவையான விதத்தில் செயற்பட்டு வருகின்றார். இது நல்லாட்சிக்கு உகந்ததல்ல எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் இன்று பலம் பொருந்திய ஒரு பாத்திரமாக மாறியுள்ளார். சட்டம் சகலருக்கும் சமமானதாக வேண்டும். குறித்த பதவியில் அமர்ந்துகொண்டு தமது நண்பர்களுக்கு விசேட கவனிப்பு வழங்குவதாயின் அது இழிவான செயலாகும் எனவும் பேராசிரியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
