-எம்.எஸ்.எம்.ஹனீபா, எம்.எஸ்.எம்.நூர்தீன்-
அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கடும் மழை பெய்துவருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் கடும் மழை பெய்துவருவதுடன், அப்பிரதேசங்களிலுள்ள தாழ்நிலப் பகுதிகளில்; வெள்ள அபாயம் தோன்றியுள்ளது.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில்; புதன்கிழமை (16) காலை 8.30 மணி முதல் இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணிவரை 42.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலைய அதிகாரி எம்.ஐ.ஏ.நஹீம் தெரிவித்தார். கடும் மழை காரணமாக அட்டாளைச்சேனை 10ஆம் பிரிவிலுள்ள தாழ்நிலக் பகுதிகளிலுள்ள குடியிருப்புகள், வயல்கள், வீதிகள், கால்வாய்கள் என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும், கடல்; கொந்தளிப்பாகக் காணப்படுதால் அதிகமான மீனவர்கள் தொழிலுக்காகக் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், இம்மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களில் 100.4 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து மழையுடன் கூடிய காலநிலை ஒரு வாரத்துக்கு நீடிக்கும் எனவும் அவர் கூறினார்.

