மகாவலி அதிகார சபையின் ஊழியர்களுக்கான பதவியுயர்வு மற்றும் புதிய நியமனங்களை வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
மகாவலி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதே வேளை தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் பக்கச்சார்பின்றி செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று முற்பகல் மகாவலி அதிகார சபையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறினார்.
ஊழியர் பதவியுயர்வு, சம்பளம் உள்ளிட்ட மேலும் சில பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு இதன்போது தெளிவுபடுத்தினார்.
எதிர்காலத்தில் அமைச்சு மட்டத்திலான ஆறு உபகுழுக்களை நியமித்து, தொழிற்சங்க பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
செயற்திறன் மிக்க சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக, ஊழியர்கள் திருப்தியுடனும் மற்றும் மகிழ்வுடனும் சேவையாற்றுவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்தல் அவசியம் என இந்த பேச்சுவார்த்தையின்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

