சர்வதேச மனித உரிமைகள் தினம்



இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
”அடுத்தவரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன்நிற்போம்” என்பதே இந்த வருடத்திற்கான தொனிப்பொருளாகும்.
ஐக்கிய நாடுகள் சபையினால் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக்கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.
அதன் அடிப்படையில், ஒருவரின் மதம், இனம், வாழ்விடம், சொத்துக்கள் என்பன மற்றொருவரின் உரிமையில் தாக்கம் செலுத்தாது.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதனூடாக மனிதனின் அபிவிருத்தியை ஐக்கியப்படுத்தி, அனைத்து நாடுகளும் முன்னோக்கி செல்ல முடியும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாயாளர், இளவரசர் செய்த் ராத் அல் ஹூசைன், மனித உரிமைகளுக்காக அனைவரும் எழுந்து நிற்க உகந்த தருணம் இதுவாகும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மனிதத்தைக் காக்க அனைவரும் ஒன்றிணைவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போது காணப்படும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் செயற்பாடுகள் மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.