"சோ'' ராமசாமி மரணம்




தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் நடிகரும் நாடக ஆசிரியருமான சோ ராமசாமி இன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 82.

"சோ" என அழைக்கப்பட்ட ஸ்ரீநிவாச ஐயர் ராமசாமி கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார்.
1934 டிசம்பர் 5ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்த அவருக்கு மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர்.
இவருடைய தந்தையார் பெயர் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் தனது சட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு சிறிது காலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியார்.
பகீரதன் என்பவர் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் தான் ஏற்ற கதாபாத்திரத்தின் ஒன்றின் பெயரான சோ என்பதையே தன் புனைப்பெயராக அவர் வைத்துக்கொண்டார்.
தன்னுடைய அங்கத எழுத்துகளுக்காகவும் அரசியல் விமர்சனங்களுக்காகவும் மிகவும் அறியப்பட்ட சோ, 1970ஆம் ஆண்டில் துக்ளக் வார இதழை துவங்கினார். அதன் பிறகு Pickwick என்ற ஆங்கில இதழையும் சில நாட்கள் நடத்தினார்.
1950களில் நாடகங்களை எழுதி நடிக்க ஆரம்பித்த சோ, சுமார் 20 நாடகங்களை எழுதி இயக்கியுள்ளதோடு நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது இந்து மகா சமுத்திரம் என்ற நூல் 6 தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
1971ல் இவரது இயக்கத்தில் முகமது பின் துக்ளக் திரைப்படம் இவருடைய திரையுலக வாழ்க்கையின் உச்சங்களில் ஒன்று.
முகமது பின் துக்ளக், உண்மையே உன் விலை என்ன உள்ளிட்ட 5 திரைப்படங்களையும் சோ இயக்கியிருக்கிறார்.
தன்னுடைய நாடகங்கள், எழுத்துகள், திரைப்படங்களில் திராவிட இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்துவந்த சோ, காங்கிரஸ் கட்சியின் மீதும் தொடர் விமர்சனங்கள் முன்வைத்துவந்தார்.
திராவிட இயக்கம் முன்வைத்த சமூகநீதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது, பெண்கள் சம உரிமை உள்ளிட்ட கருத்துக்களுக்கு எதிரான விமர்சனங்களைத் தொடர்ந்து அவர் முன்வைத்துவந்தார்.
1999ல் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்தபோது, மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சோ, 2005வரை அந்தப் பதவியில் இருந்தார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் சோ தொடர்ந்து மருத்துவனையிலும் வீட்டிலும் சிகிச்சைபெற்றுவந்தார். பிறகு சில நாட்களுக்கு முன்பாக சுவாசப் பிரச்சனையின் காரணமாக மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சோ டிசம்பர் 7ஆம் தேதி அதிகாலை காலமானார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராக விளங்கிய சோ, அவர் காலமான அடுத்த நாள் காலமாகியிருக்கிறார்.