சுற்றாடல் அமைச்சராக எதிர்வரும் நான்கு வருடங்களுக்குள் நாட்டின் வனப் பகுதியின் அடர்த்தியை 32 வீதமாக அதிகரிப்பதே தமது இலக்கு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
பசுமை பாடசாலை திட்டத்தின் கீழ் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நிர்மானிக்கப்பட்ட உயிர் வாயு பசளை பசுமை பயிற்செய்கை மற்றும் சூரிய சக்தி திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது பசுமைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
நாட்டின் வனப் பகுதியின் அடர்த்தியை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த விடயம் பின்வருமாறு….
ஜனாதிபதி மாளிகையில் நான் வசித்தால், மாதாந்தம் நீர் மற்றும் மின்சார கட்டணமாக 150 இலட்சம் ரூபாவை செலுத்த வேண்டும்.எவரும் ஜனாதிபதி மாளிகையில் தற்போது வசிக்காத போதிலும், மின்சாரத்திற்கு 25 – 30 இலட்சம் ரூபா கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் தரைக்கு அடியில் உள்ள மாளிகைக்கு 24 மணித்தியாலங்களும் குளிரூட்டி அவசியம் என்பதாலேயே இவ்வளவு மின்சாரம் தேவைப்படுகின்றது. இலங்கையின் வனப்பகுதயின் அடர்த்தி 27, 28 ஆக காணப்படுகின்றமையை இந்த பிள்ளைகள் அறிவார்கள். எனவே சுற்றாடல் அமைச்சராக எதிர்வரும் 4 வருடங்களுக்குள் நாட்டின் வனப் பகுதியின் அடர்த்தியை 32 வீதமாக அதிகரிப்பதே எனது இலக்காகும்.
வனப்பகுதியின் அடர்த்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கு முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஆகாய மார்க்கமாக விமானப்படையினர் இலங்கையிலுள்ள வனப்பகுதிகள் தொடர்பில் ஆராய்வார்கள் எனவும் இது தொடர்பில் செய்மதி ஊடாக அவதானிக்கப்படுவதாகவும் இதன் போது ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, 2016 தேசிய தர நிர்ணய விருது வழங்கும் விழா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது.
விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தர நிர்ணய சபையினால் வருடாந்தம் இந்த விருது வழங்கம் விழா ஏற்பாடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

