கைதிகள் குளிப்பதற்கு நவீன வசதி



-எம்.எஸ்.எம்.நூர்தீன்-
 மட்டக்களப்புச் சிறைச்சாலையிலுள்ள கைதிகள் குளிப்பதற்கான நவீன வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இச்சிறைச்சாலைக்கு மாவட்டச் செயலக நிதியிலிருந்து சுமார் 3 இலட்சம் ரூபாய்  செலவில் தண்ணீர்த் தாங்கி மற்றும் சவர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக கைதிகள் குளிப்பதற்கான சவர் வசதிகள் இன்மையால் கைகளினாலேயே தண்ணீரை எடுத்து குளித்து வந்தனர். சுமார் 350 முதல் 400 கைதிகள் தினமும் இச்சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்கு விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் குறித்த நிலையைப் பார்வையிட்ட பின்னர் இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர் தெரிவித்தார்.