அம்பாறையில் சுதந்திர தினத்தைக் கொண்டாட ஏற்பாடுகள்




இலங்கையின் 69ஆவது சுதந்திர தின விழாவை, அம்பாறை மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என, அம்பாறை மாவட்ட செயலாளர் துசித பீ வணிக சிங்க,  தெரிவித்தார். 

அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, தேசிய ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான சுதந்திர தின விழா நிகழ்வுகள், அம்பாறை வீரசிங்க மைதானத்தில், சனிக்கிழமை (04) நடைபெறவுள்ளனவெனவும் அவர் கூறினார். 

சுதந்திர தின விழா ஏற்பாடுகள் குறித்து மாவட்டத்திலுள்ள திணைக்களத் தலைவர்கள், முக்கியஸ்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட மட்ட சுதந்திர தின விழாவில், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவம், பௌத்த ஆகிய சமயங்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களும் நிகழ்வுகளில் பங்கேற்றவுள்ளனர். 

இதற்கான ஏற்பாடுகளை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மேற்கொண்டுள்ளனர். 

அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேசங்களிலிருந்தும் அரச உத்தியோகத்தர்கள், பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொள்வதற்கேற்ற வகையில், அன்றைய தினவிழா நிகழ்வுகளில் இலங்கைப் போக்குரத்துச் சபையினால் பஸ் சேவையும் சீராக நடாத்தப்படவுள்ளது. இது தொடர்பிலும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டலுவல்கள் அமைச்சும் இது குறித்து திணைக்களத் தலைவர்களை அறிவுறுத்தியுள்ளது.