-இஸட்.ஷாஜஹான்-
நீர்கொழும்பு, தெல்வத்தை சந்திக்கு அருகில் அமைந்துள்ள ஆயர்வேத மசாஜ் நிலையத்தில், மசாஜ் செய்துவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட புத்தளம் பொலிஸ் பிரிவில் பணியாற்றும் 35 வயதுடைய உப பொலிஸ் பரிசோதகரை, எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த உத்தரவிட்டார்.
இரு பிள்ளைகளின் தந்தையான குறித்த உப பொலிஸ் பரிசோதகர், ஓர் அரச ஊழியராகப் பணியாற்றிக்கொண்டு, மசாஜ் நிலையத்துக்குள் பலாத்காரமாக நுழைந்தது மாத்திரமின்றி, பலாத்காரமாக மசாஜ் செய்துகொண்டதாக, சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரை, குறித்த மசாஜ் நிலையத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மடக்கிப்பிடித்து, நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தஸநாயக்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன கமகே ஆகியோரின் ஆலோசனையின் கீழ், நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமன்திலக்க வெலிவிட்ட தலைமையிலான குழுவினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

