(எம்.ஜே.எம்.சஜீத்)
கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள கிழக்கு மாகாண போக்குவரத்து அமைச்சினுடைய போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தான் நினைப்பது போன்று கன்மூடித்தனமாக செயற்படுவதாகவும், இதனால் கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் தென்கிழக்கு கரையோர மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்பாட்டாளர் எம்.எஸ். பைறூஸ் தெரிவித்தார்.
தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (11) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது நெருங்கிய நண்பர் ஒருவரை கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக நியமித்துள்ளார். இவர் தான் தனது சுய விருப்பத்தின் அடிப்படையில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.
இதன்காரணமாக தென் கிழக்கு கரையோர பிரதேசங்களில் தனியார் பஸ் சேவைகளில் ஈடுபட்டு வரும் பஸ் உரிமையாளர்கள் பல்வேறான பிரச்சினைகளுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருகின்றனர், இதற்கென சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இதுவிடயமாக சம்மந்தப்பட்ட தரப்பினர் தீர்வினை வழங்க தவறும் பட்சத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்.
கடந்த காலங்களில் இலங்கைப் போக்குவரத்து அதிகார சபையினருக்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருக்குமிடையில் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தும் விடயத்தில் பல்வேறான பிரச்சினைகள் எழுந்தன. இப்பிரச்சினைகளை பல்வேறு தரப்பினருக்கும் அறியப்படுத்தியும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் வாகரை நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இவ்விரு சாராரும் ஒன்றிணைந்த சேவையில் ஈடுபடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கமைவாக எவ்வித பிரச்சினைகளும் இன்றி பொதுமக் கள் சேவை இடம்பெற்று வந்தது.
இருந்த போதிலும் அண்மையில் கல்முனையில் இருந்து வாகரை ஊடாக திருகோணமலைக்குச் செல்லும் போக்குவரத்து சேவைக்கு புறம்பாக சொகுசு பஸ் என்ற போர்வையில் இரண்டு புதிய பஸ் வண்டிகளுக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் ஏலவே இவ்வழி ஊடாக சேவையில் ஈடுபடும் பஸ் உரிமையாளர்கள் பல்வேறான சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஏற்கனவே சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளுக்கு போதிய வருமானம் அற்ற நிலையில் புதிய பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுவதால் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே இப்பாதை ஊடாக இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 14 பஸ் வண்டிகளும், தனியார் பஸ் உரிமையாளர்களின் 21 பஸ்வண்டிகளும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மேலதிகமாக குறிப்பிட்ட நேரத்தினை மையப்படுத்தி இரண்டு புதிய சொகுசு பஸ்கள் தற்காலிக அனுமதியின் பேரில் சேவையில் ஈடுபட்டு வருவதால் பல்வேறான வீதி விபத்துக்களும் இன்னோரன்ன பிரச்சினைகளும் எழுந்துள்ளன.
தனியார் சொகுசு பஸ்களை சேவை யில் ஈடுபடுத்துவதாக இருந்தால் அவற்றை ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்களுக்கு வழங்கினால் புதிதாக எவ்வித பிரச்சினையும் எழுவதற்கான வாய்ப்பில்லை எனக் குறிப்பிடும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர், தமக்கு நெருங்கிய நண்பர்களுக்கு, சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளுக்கு மேலதிகமாக சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அனுமதியினை வழங்குவது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் அந்த சங்கத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

