தான் அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றியதாகவும், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும்போதே இறந்துபோயிருந்ததாக கூறிய பெண்ணை சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பெயரில் நடத்தப்பட்ட தீபா பேரவை என்ற ஓர் அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராமசீதா என்ற பெண், தான் அப்போலோ மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததாகவும், கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படும் போதே உயிரிழந்த நிலையில்தான் கொண்டு வரப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
ஆனால், இது தவறான தகவல் என்றும், ராமசீதா தங்களது மருத்துவமனையில் பணிபுரியவில்லையென்றும் அப்போலோ மருத்துவமனையின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், ராமசீதா என்ற இந்தப் பெண்ணைக் காவல்துறையினர் இன்று கைதுசெய்தனர். பொது அமைதியைக் குலைத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

