கிண்ணியாவில் டெங்கு



-வடமலை ராஜ்குமார்-
 அண்மைக் காலமாகவிருந்து கிண்ணியாவில் பரவி வருகின்ற டெங்கு நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்தும்வரை கிண்ணியாவிலுள்ள பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களைத் தற்காலிகமாக மூடுவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப்; கோரிக்கை  விடுத்துள்ளார்.   கிண்ணியாப் பிரதேசத்துக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (27) நடைபெற்றபோதே, அவர்  இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

கடந்த சில தினங்களாக சுமார் 20 மாணவர்கள் டெங்குக் காய்ச்சல் காரணமாக தங்கள் பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்களின்  அனுமதியுடன் இடைநடுவில் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.  மேலும்;, பாடசாலைகளை அண்டிய சூழலிலும்   நுளம்புகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதை அவதானிக்கவும் முடிகின்றது. எனவே, கல்வித் திணைக்களத்தின் ஊடாக கிழக்கு மாகாண ஆளுநர்  மட்டத்தில் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கிண்ணியாவில் டெங்குக் காய்ச்சல் காரணமாக  இதுவரையில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 400 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் கிண்ணியா தள வைத்தியசாலையிலும் திருகோணமலை பொது
வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்,  நுளம்புகளுக்காக புகை அடிக்கும் கருவிகள் ஐந்துடன் ஐந்து பேர் மட்டக்களப்பிலிருந்து கிண்ணியாவுக்கு வந்துள்ளனர்.