ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இரண்டு மாதங்களில் அரைச் சதத்தை அண்மித்தன



கடந்த இரண்டு மாதங்களில், 49 ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் கொழும்பில் நடத்தப்பட்டுள்ளனவென, பொலிஸார் தெரிவித்தனர். பல்வேறு கோரிக்கைகள் மற்றும் வேண்டுகோள்களை முன்வைத்தும் அரசாங்கத்தின் சில தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இந்த ஆரப்பாட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் அதிகளவிலான ஆர்ப்பாட்டங்கள், கோட்டை ரயில் நிலையத்தை மையப்படுத்தி இடம்பெற்றுள்ளனவெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதனால் நாட்டின் பொருளாதார நகரமான கொழும்பு மாநகரின் போக்குவரத்துக்குத் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளனவெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த இரண்டு மாதங்களுக்குள் நடைபெற்ற 49 ஆர்ப்பாட்டங்களில் பெரும்பாலானவை, பல்கலைக்கழக மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தனவெனவும் பொலிஸார் தெரிவித்தனர். காலி வீதி, கொள்ளுப்பிட்டி சந்தி, லோட்டஸ் வீதி, செரமிக் சந்தி, ஒல்கொட் மாவத்தை, லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் மற்றும் நாடாளுமன்ற சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளே, ஆர்ப்பாட்டங்களுக்காக அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன.