சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடல் நல்லடக்கம்



சுட்டுக்கொல்லப்பட்ட ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோவின் உடல் இன்று திங்கள்கிழமை மாலை தங்கச்சிமடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்று நடைபெற்ற இறுதி அஞ்சலி ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கான மீனவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டார்கள்.
தங்கச்சிமடத்தில் உள்ள அந்தோணியார் கல்லறைத் தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 7 நாட்களாக நடந்த மீனவர்களின் தொடர் போராட்டம் இன்று தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை வீரரை கைது செய்ய வேண்டும். மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு தீ்ர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை ராமேஸ்வரம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை வாங்க மாட்டோம் என கூறி தங்கச்சிமடத்தில் மீனவர்களும், பிரிட்ஜோவின் உறவினர்களும் கடந்த 7 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.