மருந்து விலைகளை மேலும் குறையும்



வறிய மக்களின் சுகாதார நலன் கருதியே மருந்துகளின் விலைகள் பெருமளவு குறைக்கப்பட்டதாக தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்துவரும் நாட்களில் மேலும் பல உயர்தரத்திலுள்ள விலை கூடிய மருந்துகளின் விலைகளைக் குறைக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
ஊடக பிரதானிகள் மத்தியில் பேசிய ஜனாதிபதி ஔடத விலைகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அரசும் செய்யாத ஒன்றை நாம் சாதித்துள்ளோம். எமது நாட்டில் கல்வி போன்றே சுகாதார சேவைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஆனால் அண்மைக்காலம் வரை வைத்தியசாலைகளில் மருந்து கிடையாது வசதிபடைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர். ஏழைகள் துன்பப்படுகின்றனர்.
சில மருந்துகள் யானை விலை குதிரை விலைபோன்று காணப்படுகின்றன. இந்த அநியாயத்துக்கு முடிவு கட்டும் வகையிலேயே மருந்துகளின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எதிர்காலத்தில் மேலும் பல மருந்துகளின் விலைகளும் குறைக்கப்படவிருக்கின்றன.
அதுமட்டுமல்ல கண்களுக்கான விழித்திரை, கண் வில்லைகளின் விலைகள் மிக அதிகமாகக் காணப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களின் உயிர்களுக்கு விலை பேசுபவர்களாக சிலர் காணப்படுகின்றனர். இவற்றுக்கு முற்றுப்புள்ளிவைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏழை நோயாளிகளுக்குப் பாதிப்பில்லாத குறைந்த விலையில் இவற்றைப் பெற்றுக் கொடுப்பதே அரசின் நோக்கமாகும்.
கல்வி, சுகாதாரம் இரண்டிலும் கொள்ளையடிப்பதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.