சுபீட்சம் மிக்க புத்தாண்டாக ஏவிளம்பி வருடம் அமையட்டும்



சிறந்த சமூகமொன்றையும் அபிவிருத்தியடைந்த நாடொன்றையும் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அமைதியான, சுபீட்சம் மிக்க புத்தாண்டாக ஏவிளம்பி வருடம் அமையட்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள புதுவருட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் – சிங்கள புத்தாண்டுடன் இணைந்துள்ள சம்பிரதாய பழக்கவழக்கங்கள் நவீன உலகில்கூட நிராகரிக்க முடியாதளவு சூழல் நேயம், மனித நேயம் என்பவற்றினால் நிறைந்து காணப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் இந்த சம்பிரதாய கலாசார உரிமையை எமது பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தி, எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர் – சிங்களவர் அனைவரும் இணைந்து இன, மத, கட்சி, நிற பேதமின்றி ஒற்றுமையாகவும் மிகுந்த குதூகலத்துடனும் கொண்டாடும் தேசிய பண்டிகையாக இந்த சித்திரைப் புத்தாண்டு அமைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மகிழ்ச்சி, சமாதானம், நல்லிணக்கம், ஒற்றுமை என்பவற்றை எப்போதும் மனதில் இருத்தி பேணிச் செல்வதன் ஊடாக முழு சமூகமும் அமைதியான சிறந்த சமூகமாக மாற்றமடையும் என பிரதமரின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.