பொதுபல சேனாவின் அலுவலகத்தில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்



குருநாகல் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு சொந்தமான அறையொன்றிலிருந்து இன முறுகலை ஏற்படுத்தும் வகையிலான 486 பதாகைகளும் பத்திரிகைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குருநாகல் மல்லவபிட்டிய முஸ்லிம் பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயற்பாட்டாளர்கள் என தெரிவிக்கப்படும் இருவரில் ஒருவருக்கு சொந்தமானதாக்க கூறப்படும் கடை அறையொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இதன் போது பத்திரிகைகள், சுவரொட்டிகள், ஆவணங்கள், இறுவட்டுக்கள் உள்ளிட்ட 486 பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் குருணாகல் மல்லவ பிடிய பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கடந்த 15 ஆம் திகதி வியாழக்கிழமை குருணாகல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
மேற்படி இரு சந்தேக நபர்களில் ஒருவருக்கு சொந்தமான வெல்லவ வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்தில் நேற்று முன்தினம் பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போது இன முறுகலை ஏற்படுத்தும் வகையிலான இந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.