அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில், சட்டவிரோதமாக இயங்கி வந்த தற்காலிக மர ஆலையொன்று, விசேட அதிரடிப்படையினரால் திடீரென சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 4 இடங்களில் சுமார் 4 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியைக் கொண்ட முதிரை மரக்குற்றிகள், நேற்று (22) இரவு 9 மணியளவில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளனவென, சாகாமம் விசேட அதிரடிப் படை முகாம் அதிகாரி ஏ.வி.டி.உதயகுமார தெரிவித்தார்.
விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அம்பாறை மாவட்ட விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி சாந்த ரத்தபிட்டிய, பொத்துவில் விசேட அதிரடிப்டை பொலிஸ் அத்தியட்சகர் கேசரரத்னவீர ஆகியோரின் ஆலோசனைகளுக்கு அமைவாக. சாகாமம் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரி ஏ.வி.டி.உதயகுமாரவின் தலைமையில், 10 பேர் கொண்ட குழுவினர், இந்தத் திடீர்ச் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன், அக்கரைப்பற்று வன பரிபாலன அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு அழைத்து, குறித்த சந்தேகநபரையும் முதிரை மரக்குற்றிகளையும், விசேட அதிரடிப்படையினர் ஒப்படைந்துள்ளனர்.
வனபரிபாலன அதிகாரிகளின் விசாரணைகளை அடுத்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றில் சந்தேகநபரையும், முதிரை மரக்குற்றிகளையும் நாளை (25) ஒப்படைக்கவுள்ளதாக, அக்கரைப்பற்று வன பரிபாலன அதிகாரியொருவர் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment