வெல்லாவெளியில் புதிய பொலிஸ் நிலையம்



மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்திற்கான புதிய பொலிஸ் நிலையம் இன்று சனிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது. 

இதுவரை காலமும் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மண்டூர் பாலமுனை பிரதேசத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து வந்த வெல்லாவெளி பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது 

30 வருடங்களுக்கு முன்னர் வெல்லாவெளி பொலிஸ் நிலையம் இருந்த இடத்திலேயே புதிய பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையில் நடைபெற்ற இந்த பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசிர் அகமட், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராஜா, ஞா.கிருஸ்ணபிள்ளை உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 

சுமார் ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இரண்டு ஹெக்டேயர் நிலப்பரப்பில் பிரதான கட்டிட தொகுதி, நிலைய பொறுப்பதிகாரி அலுவலகம், ஆயுதகளஞ்சியம், கடமை உத்தியோகத்தர் அலுவலகம், தொலைபேசி இயக்குனர் அலுவலகம், இரு சிறைக்கூடங்கள், தனி பொலிஸ் அலுவலர்களுக்கான விடுதி என்பன அமைக்கப்பட்டுள்ளது.