கிட்டிய கௌரவம்



பசுமையான மற்றும் தூய்மையான சுற்றுச் சூழலைக் கொண்ட பாடசாலையாக, கடந்த 2015, 2016ம் ஆண்டுகளில், ஜனாதிபதி தேசிய விருதான சுக சர தக்சலாவ விருதினை இரண்டு தடவைகள், கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயம் பெற்றுக்கொண்டது. 

இரண்டு தடவைகள் இவ் விருதினை பெற்றுக்கொண்ட இந்தப் பாடசாலை, 2017ம் ஆண்டுக்கான சுற்றாடல் தகவல் நிலையத்தை ஆரம்பிப்பதற்காக தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தமிழ் பாடசாலை என்ற பெருமையையும் தற்போது தன்வசப்படுத்தியுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் தேசிய ரீதியில் ஜந்து பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக சுற்றாடல் தகவல் நிலையம் ஆரம்பிப்பது வழக்கமாகும். 

அந்த வகையில் 2017ம் ஆண்டுக்கான சுற்றாடல் தகவல் நிலையம் அமைப்பதற்காக தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜந்து பாடசாலைகளில் ஒரேயொரு தமிழ் பாடசாலையாக கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயம் காணப்படுகின்றது என்பது விஷேட அம்சமாகும். 

ஏனைய நான்கு பாடசாலைகளும் சிங்கள மொழி பாடசாலைகளாகும். 

இதற்கான நிகழ்வு கடந்த 30ம் திகதி பாடசாலையில் இடம்பெற்றது. 

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளா் நாயகம் இதில் கலந்துகொண்டு சுற்றாடல் தகவல் நிலையத்தை தொடக்கி வைத்தார். 

அத்தோடு, மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான நூல்கள், நூலக உபகரணங்கள் என்பனவும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.