இஸ்ரேல் பிரஜை மன்னாரில் அன்னாசி பயிர்செய்கை



மன்னார் – பருப்புக்கடந்தான் பகுதியில் இஸ்ரேல் பிரஜை ஒருவரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அன்னாசி பயிர்செய்கை தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பருப்புக்கடந்தான் பகுதியில் இஸ்ரேல் பிரஜை ஒருவர் அன்னாசி பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ளார்.
அவர் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் அன்னாசி பயிர்செய்கையில் ஈடுபட்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
பருப்புக்கடந்தான் பகுதியில் சுமார் 160 ஏக்கர் காடு அழிக்கப்பட்டு அன்னாசி பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விஷம் மற்றும் இரசாயனங்கள் இன்றி எவ்வாறு இயற்கையாக பயிர்செய்கையை முன்னெடுப்பது என்பது தொடர்பில் இலங்கை விவசாயிகளுக்கு காண்பிப்பதற்காகவே தாம் இலங்கை வந்துள்ளதாக குறித்த இஸ்ரேல் பிரஜை தெரிவித்தார்.
”மன்னாரில் அன்னாசி பயிரிடுவது கடினமான விடயம் என மக்கள் எமக்கு கூறினர். எனினும், அதனை செய்ய முடியும் என்பதை அவர்களுக்கு நாங்கள் காண்பித்துள்ளோம்,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த காணி இலங்கையர் ஒருவர் ஊடாக இஸ்ரேல் நாட்டுப் பிரஜைக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அன்னாசி பயிர்செய்கை பண்ணப்பட்ட 160 ஏக்கர் காணியில் சுமார் 100 ஏக்கர் காணி பொதுமக்களுக்கு சொந்தமான காணி என அவர் தெரிவித்தார்.
1989 ஆம் ஆண்டு கச்சேரியூடாக மக்களுக்கு வழங்கப்பட்ட காணி என பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
எனினும், குறித்த காணியில் குடியிருந்த மக்கள் இடம்பெயர்ந்து தற்போது இந்தியாவில் வாழ்ந்து வருவதாகவும், மக்களுக்கு உரித்தான காணியினை பெற்றுத்தருமாறு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மன்னார் பிராந்திய வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஈ.ஜே.எம்.ஜே.கே.ஏக்கநாயக்க-
இதற்கு யார் அனுமதி வழங்கியது என தமக்குத் தெரியாது எனவும், 2015 ஆம் ஆண்டு தாம் மன்னார் பிராந்திய அதிகாரியாக பொறுப்பேற்றதன் பின்னர் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாட்டிற்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க இடத்தினை மீள பெற்றுக்கொள்ளல், காடழிப்பு ஆகிய இரண்டிற்கும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஈ.ஜே.எம்.ஜே.கே.ஏக்கநாயக்க சுட்டிக்காட்டினார்.