“மாயக்கல்லி மலையில் சிலை நிறுவுவதில் தடையில்லை. மலையை சூழவுள்ள காணிகளை அபகரிப்பதையே எதிர்க்கின்றோம்” என, அம்பாறை மாவட்ட சர்வமத பேரவையின் முஸ்லிம் தமிழ் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தேசிய சமாதான பேரவையின் அனுசரணையில் ரூவிசன் அமைப்பின் ஏற்பாட்டில் இறக்காமம் பிரதேச சபை கட்டடத்தில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற அம்பாறை மாவட்ட சர்வமத பேரவைக்கான விழிப்பூட்டல் செயலமர்வில் கலந்துகொண்டு பௌத்த மத உறுப்பினர்களை தெளிவூட்டும் வகையில், கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
சிலை வைப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், அதனை பயன்படுத்தி அருகில் உள்ள பொதுமக்களின் காணிகளில் அத்துமீறி கட்டடங்களை அமைப்பதையே எதிர்க்கின்றோம். நாளடைவில் குடியேற்றங்கள் நடைபெறலாம் எனவும் இதனால் இன முரண்பாடுகள் தோன்றலாம் எனவும் அச்சம் கொள்கின்றோம்.
ஆகவே, மாயக்கல்லி விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், பேரவையில் உள்ள மூவின அங்கத்தவர்களும் இணைந்து சம்மந்தப்பட்டவர்களுடன் சமரசமாக பேச வேண்டும். அதனூடாக உண்மை நிலையை அவர்களுக்கு உணர்த்தி குறித்த பிரச்சினைக்கான தீர்வை விரைவில் எட்ட வேண்டும் எனும் கோரிக்கையையும் முன்வைத்தனர்.
ரூவிசன் அமைப்பின் திட்ட இணைப்பாளர் சாகிரா இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற மதங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தும் விழிப்பூட்டல் செயலமர்வில் தேசிய சமாதான பேரவையின் உதவி திட்ட முகாமையாளர் ரசிகா செனவிரத்ன கலந்து கொண்டு, ஐந்து விடயங்கள் தொடர்பாக விளக்கியதுடன், பேரவையின் உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் குழுச் செயற்பாட்டின் மூலம் அறிந்துகொண்டார்.
இலங்கையில் பெண்களின் பாதுகாப்பு, ஜனநாயக மயப்படுத்தல் ஜனநாயகத் தன்மை மற்றும் ஆட்சி முறை ஆட்சி, உளவியல் சமூக மீட்சி, காணி மற்றும் ஆதன மீளளிப்பு மற்றும் பொருளாதார மீளொருங்கிணைப்பு பின்னனி, அரசியல் வன்செயல்களுக்கான நீதி ஆகிய விடயங்களும் இங்கு விரிவாக ஆராயப்பட்டு குழுத்தலைவர்களின் மூலம் முன்வைக்கப்பட்டது.


Post a Comment
Post a Comment